![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-06-Jun-2024-07-58-PM-2513.jpg)
கோலாலம்பூர், ஜூன் 6- இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடிக்கு ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மலேசியா-இந்தியா இடையிலான தொப்புள் கொடி உறவு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று மீண்டும் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு வழங்கிய வாழ்த்து செய்தியில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் அந்நாடு முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பதிந்திருப்பதை வெளிப்படுத்துவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம் என்று டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
‘மோடியின் தலைமையில் இந்தியா மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இது குறித்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தி மேலும் மறுமலர்ச்சியை கொண்டு வர இறைவன் அருள் புரியட்டும் என விக்னேஸ்வரன் வாழ்த்தியுள்ளார்.
மலேசியா-இந்தியா ஆகிய இருநாடுகளும் இணைந்து இருவழி உறவை வலுப்படுத்துவதோடு மேலும் பல இரு நாட்டு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இணைந்து பணியாற்றுவோம் என்று விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.