
புது டெல்லி, மே-11-மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, பெருநிறுவனங்கள் மீண்டும் Work From Home எனப்படும் வீட்டிலிருந்தே வேலைசெய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதோடு, அவசியமில்லாமல் தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று அதிரடி வேண்டுகோள் விடுத்தார்.
வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில்களைப் பயன்படுத்துதல், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற எளிய நடைமுறைகளை ஒரு தேசக் கடமையாகப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய விலைவாசி உயர்வைச் சமாளிக்க, மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.



