மலாக்கா, மார்ச் 29 – வயதுக் குறைந்த பெண்ணின் நிர்வாணப் படத்தை பகிரப் போவதாக மிரட்டிய கல்லூரி மாணவனுக்கு மலாக்கா Ayer Keroh உயர் நீதிமன்றம் 2,500 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சமையல் கலை மாணவனான 20 வயது Chan Yu Jian என்பவருக்கே நீதிமன்றம் அந்த அபராதத்தை விதித்தது.
இரு வாரங்களுக்கு முன்னர் அவன் அக்குற்றத்தைப் புரிந்திருக்கிறான்.
Instagram -மில் அறிமுகமான 15 வயது பெண் பிள்ளையை அவன் அவ்வாறு மிரட்டியதில், அவனுக்கு பயந்து தன் தாயின் பணத்தைத் திருடி, e-hailing ஓட்டுநர் வாயிலாக அவனிடம் 1,500 ரிங்கிட்டை அவள் கொடுத்திருக்கிறாள்.
ஓராண்டாக Instagram-மில் மட்டுமே இருவருக்கும் அறிமுகம். மற்றபடி நேரில் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவன் எதற்காக அப்படி மிரட்டினான் என்பது தெரியவில்லை.
நல்லதொருப் பாடமாக இருக்கும் வகையில் தண்டனை அமைய வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்திய நிலையில், தாம் படித்து வருவதாலும் பெற்றோரைக் கவனித்துக் கொள்வதாலும் சிறைத்தண்டனை மட்டும் வேண்டாம் என அவன் நீதிமன்றத்திடம் முறையிட்டான்.
கடைசியில் அவனுக்கு 2,500 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.