புத்ரா ஜெயா, ஏப்ரல் -15, ஈரான், ஜோர்டான், லெபனான், ஈராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருக்கும் மலேசியர்கள் உரியப் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதே சமயம் பயண அட்டவணையில் தடங்கல் ஏற்படும் சாத்தியத்தை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
மேற்காசியாவில் அதிகரித்துள்ள பதட்டத்தால் ஈரான், லெபனான், ஜோர்டான், ஈராக் ஆகியவை தத்தம் வான் பகுதியை மூடியிருப்பதால் விமானப் பயணங்கள் பாதிப்புறலாம் என அது சுட்டிக்காட்டியது.
நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அதிகாரத் தரப்பின் உத்தரவுகளைப் பின்பற்றி எந்நேரமும் முழு எச்சரிக்கையாக இருக்குமாறும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
ஈரான், ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் Drone தாக்குதலைத் தொடுத்ததை அடுத்து மேற்காசிய நெருக்கடி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் நிலைமை மேலும் மோசமாகி அவ்வட்டாரத்தில் பெரும் போர் மூளலாம் என அனைத்துலக சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அப்பகுதிகளில் வாழும் மலேசியர்களின் பாதுகாப்பு நிச்சயம் உறுதிச் செய்யப்படும் என விஸ்மா புத்ரா உத்தரவாதம் அளித்தது.
அங்கு அவசர உதவித் தேவைப்படும் மலேசியர்கள், அருகில் உள்ள மலேசியத் தூதரகம் அல்லது பேராளரகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.