கோலாலம்பூர், ஏப்ரல் 1 – சிலாங்கூர், செரி கெம்பாங்கானில், வார இறுதி விடுமுறைக்கு சென்றிருந்த குடும்பம் ஒன்றின் மகிழ்ச்சி துயரத்தில் முடிந்தது.
நீரில் மூழ்கி பத்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த வேளை ; அவனது தாயையும், இளைய சகோதரியையும் காணவில்லை.
உயிரிழந்த சிறுவன், அவனது நான்கு மற்றும் ஒன்பது வயது சகோதரர்களுடன் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென சுங்கை கோட்டா பெர்டானா ஆற்றின் வலுவான நீரோட்டத்தில், அவர்கள் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் நேற்று மாலை மணி 4.35 வாக்கில் நிகழ்ந்தது.
தந்தை வழங்கிய தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை உறுப்பினர்களுடன் சேர்ந்து, அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர், மாலை மணி 5.18 வாக்கில், ஒன்பது வயது சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.
40 நிமிட இடைவெளிக்கு பின்னர், பத்து வயது சிறுவன் மீட்கப்பட்ட வேளை ; அவன் உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
அச்சம்பவத்தில், அடித்துச் செல்லப்பட்ட 38 வயது தாயையும், நான்கு வயது மகளையும் தேடும் பணிகள் தொடர்வதாக, செர்டாங் போலீஸ் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் தெரிவித்தார்.