
கோலாலம்பூர், மே-11-மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் 7.955 மில்லியன் ரிங்கிட் நிதியில் செயல்படுத்தப்பட்ட ‘Peranti Mahasiswa’ எனும் இத்திட்டம், நேற்று மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் அரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் B40,M40 குடும்பங்களைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்திய மாணவர்களின் டிஜிட்டல் கல்வி அணுகலை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
திட்டத்தின் முக்கிய இயக்க சக்தியாக விளங்கும் அமைச்சர் ரமணன், இந்த முயற்சி B40 மற்றும் M40 மாணவர்கள் உயர்கல்வியில் எந்தத் தடையுமின்றி முன்னேற வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கூறுகையில், கல்வி அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், முழு பயனாளர்கள் பட்டியல் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் மித்ரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய உயர்கல்வி மாணவர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம், கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் “யாயாசான் டிடிக் நெகாரா” எனும் அறவாரியத்தின் முழு ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டது என அவர் மேலும் கூறினார்.



