
கோலாலாம்பூர், ஜூன்-15-இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,953 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை தரவுகளின்படி, வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக, உற்பத்தித் துறை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய முக்கியத் துறைகளிலேயே இந்த வேலை இழப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
இச்சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3 விழுக்காடாகக் குறைந்து, தொழிலாளர் சந்தை நிலையாக உள்ளதாக மனித வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், வேலை இழந்த தொழிலாளர்களை MYFutureJobs தளம் வழியாகப் புதிய வேலைவாய்ப்புகளுடன் இணைக்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தப் புதிய பயிற்சிகளை வழங்கவும் அமைச்சு தீவிர அதிரடித் தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்களின் அடுத்தகட்ட தொழில் பாதையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



