![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-10-Jun-2024-12-55-PM-8067.jpg)
கோத்தா பாரு, ஜூன்-10, வாடிக்கையாளரிடம் இருந்து 50,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைக் கேட்டுப் பெற்றதன் தொடர்பில் கிளந்தானில் கைதான வங்கி முன்னாள் நிர்வாகி ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை வரையிலான அத்தடுப்புக் காவல் ஆணையை, கோத்தா பாரு மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, அவருக்கு அந்த 5 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வங்கியின் திட்டமொன்றை மேற்கொள்வதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக 50 வயது மதிக்கத்தக்க அந்நபர் புகாரை எதிர்நோக்கியுள்ளார்.
நேற்று கோத்தா பாரு MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது அவர் கைதானார்.