
புத்ராஜெயா, மே-19 – கடந்தாண்டு நாட்டில் அடையாள அட்டைகள் காணாமல் போன சம்பவங்களில் 50 விழுக்காடு அல்லது 142,535 சம்பவங்கள், 15 முதல் 30 வயது இளையோரை உட்படுத்தியவையாகும்.
அதுவும், அவற்றில் 136,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் கவனக்குறைவால் காணாமல் போனவையாகும்; மற்றவை திருடப்பட்டன அல்லது பேரிடர்களில் தொலைந்து போனவை.
இளையோர் மத்தியில் இப்பிரச்னை மோசமாகி வருவது மிகவும் கவலையளிப்பதாக, இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ தெரிவித்தார்.
அடையாள அட்டையானது குடிமக்களின் பல்வேறு அதிகாரப்பூர்வ அலுவல்களுக்கு அத்தியாவசியமான ஆவணமாகும்.
எனவே, கவனக்குறைவாக இருந்து அவற்றை தொலைத்து விடுவதால் ஏற்படும் சிக்கல்களை இளையோர் உணர்ந்திருக்கவில்லை.
தங்களின் சுய விவரங்கள் திருடப்பட்டு, மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அவர்கள் அறியவில்லை; அல்லது மெத்தனம் காட்டுகின்றனர்.
காணாமல் போன அடையாள அட்டைகளுக்கு மாற்று அட்டைகளைப் பெற விண்ணப்பிக்கும் போது அபராதக் கட்டணம் இருப்பதையும் ஹானா இயோ சுட்டிக் காட்டினார்.
கடந்தாண்டு அடையாள அட்டைகள் காணாமல் போன சம்பவங்கள் ஆக அதிகமாக சிலாங்கூரில் நிகழ்ந்துள்ளன; அங்கு மொத்தமாக 23,000 சம்பவங்கள் பதிவாகின.
அதற்கடுத்த நிலையில் 20,000 சம்பவங்களுடன் கோலாலாம்பூரும், 17,000 சம்பவங்களுடன் ஜோகூரும் உள்ளன.
புத்ராஜெயாவில், தேசியப் பதிவிலாகாவான JPN-னுடன் வியூக ஒத்துழைப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு ஹானா இயோ அவ்வாறு பேசினார்.