
பெக்கான் – மே 21- கடந்த மார்ச் மாதம், பெக்கான் ஃபெல்டா சினி திமூரில் (Felda Chini Timur), தனது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஆட்களைத் தயார் செய்தனுப்பிய இல்லத்தரசி மற்றும் அவர் திட்டத்திற்கு உதவிய அவரது 5 ஆண் நண்பர்கள் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
27 வயதான அப்பெண், கடன் பிரச்னை காரணமாக இச்செயலில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய ஆட்களை ஆயுதத்தோடு வந்து கொள்ளையடிக்க உத்தரவிட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதென்று மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஜைதி மாட் ஜின் (Mohd Zaidi Mat Zin) தெரிவித்துள்ளார்.
அக்கொள்ளைச் சம்பவத்தில் திருடிய விலையுயர்ந்த பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தைக் கொண்டு தன்னுடைய கடனை அடைக்க முற்பட்டதோடு மட்டுமல்லாமல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியமும் கொடுத்துள்ளார் அப்பெண்.
தனது சொந்த மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும்போதும் கூட அமைதியாக இருந்த அப்பெண் உட்பட மற்ற கொள்ளையர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.