
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS வியாழக்கிழமையன்று செப்பாங் KLIA விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், அம்முயற்சி தவிடுபொடியானது.
400-க்கும் மேற்பட்ட வங்காளதேசிகள், பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்திய நாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் இந்த 105 பேர், மலேசியாவுக்குள் நுழைவதற்கான எந்த விதிமுறைகளையும் பூர்த்திச் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
KLIA-வுக்கான விமானத்தில் ஏறிய கையோடு, மூன்றாம் தரப்பு நாட்டுக்குச் செல்வதற்கான முன்பதிவை இரத்து செய்து விட்டு, இந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதே இவர்களின் யுக்தியாகும்.
இதையடுத்து தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் தத்தம் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.