
கோலாலாம்பூர்- ஜூலை-31 – ‘Turun Anwar’ பேரணிக்கு குறுக்கே நிற்காமல் அது சுமூகமாக நடந்தேற அனுமதி வழங்கியதன் வழி, மடானி அரசாங்கத்தின் அரசியல் முதிர்ச்சி வெளிப்பட்டுள்ளது.
பினாங்கு, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட் அவ்வாறு வருணித்துள்ளார். மக்களின் பேச்சுரிமையையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் அரசாங்கத்தின் கடப்பாட்டை இது பறைசாற்றுகிறது. இப்பேரணியால் அரசாங்கத்துக்கு பாதிப்பேதும் இல்லை.
என்ற போதிலும், பேரணி நடத்தியவர்களின் கவலைகளை அரசாங்கம் புரிந்துகொள்கிறது; ஒருவேளை பேரணி ஏற்பாடு செய்யப்படாமல் இருந்திருந்தால் கூட, மக்களுக்கும் நாட்டுக்குள் எது சிறந்ததோ அதை மடானி அரசாங்கம் வழக்கம் போல் செவ்வனே செய்துகொண்டுதான் இருக்கும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவி விலக வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை Dataran Merdeka-வில் எதிர்கட்சியினர் அப்பேரணியை நடத்தினர்.
இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதோடு, 3,000 போலீஸ்காரர்களைப் பணியில் அமர்த்தி முழு பாதுகாப்பையும் வழங்கியது. சுமார் 18,000 பேர் அந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.