
புத்ரா ஜெயா, பிப்ரவரி -27-கடந்த ஆண்டு முழுவதிலும் மலேசியாவிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 சதவீதம் அதிகரித்து 42.19 மில்லியனாக உயர்ந்ததோடு ,இது உலக சராசரியை விட மிக அதிகம்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களின்படி , 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 37.96 மில்லியன் சுற்றுப்பயணிகளை ஒப்பிடும்போது கடந்த ஆண்டு வருகை புரிந்த சுற்றுப்பயணிகளிள் எண்ணிக்கை பெரும் அளவில் உயர்ந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்சில் தெரிவித்தார்.
அனைத்துலக சுற்றுப்பயணிகளின் நம்பகத்தன்மைக் கொண்ட பிரதான சுற்றுலா மையங்களில் ஒன்றாக மலேசியா இருந்து வருகிறது என்ற நிலையை இது பிரதிபலிப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாமி சுட்டிக்காட்டினார்.
மலேசியாவிற்கு வருகை புரியும் 2026 ஆம் ஆண்டுடன் இணைந்து 47 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகளையும் 329 பில்லியன் ரிங்கிட் வருவாயையும் அரசாங்கம் இதற்கு முன்னர் இலக்காகக் கொண்டிருந்தது.



