
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4-இந்துக்களை மீண்டும் சீண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ் புகார் செய்துள்ளார்.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள இந்து கோயிலை உடைப்போம் எனக் கூறி வரும் சனிக்கிழைமை பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு சம்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட சமயத்தவரை சினமூட்டி குளிர்காய நினைக்கும் இத்தகைய போக்கு, பல்லின மக்கள் வாழும் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுத்து விடும்.
எனவே அதனை முன்கூட்டியே தடுக்க ஏதுவாக சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸ், உள்துறை அமைச்சு மற்றும் பிரதமரைக் கேட்டுக் கொள்வதாக ராயர் தனது புகாரில் கூறினார்.
மற்ற சமயத்தார் குறிப்பாக இந்துக்களைத் தொடர்ந்து இழிவுப்படுத்தியும் சினமூட்டியும் வரும் சாம்ரி வினோத் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் செய்யப்பட்டு விட்டன.
இருந்தும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்படி நீதிமன்றத்தில் அவரைக் குற்றம் சாட்டாத வரை, அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், வேண்டியவர்களுக்கு சலுகைக் காட்டுவதாகவும் ஒரு கண்ணோட்டம் தொடரும் என ராயர் எச்சரித்தார்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயலும் சம்ரி வினோத்துக்கு எதிராக பெரிய அளவில் போலீஸ் புகார்களை செய்யுமாறும் ராயர் கேட்டுக் கொண்டார்.



