
கோலாலாம்பூர், ஏப்ரல்-11-சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகைகளை உயர்த்தும் சுகாதார அமைச்சரின் பரிந்துரைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இம்முயற்சி தாதியர்கள் ஆற்றும் முக்கியப் பங்கிற்கு வழங்கப்படும் உரிய அங்கீகாரம் என, பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் Dr. லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சாலம் கூறினார்.
இந்நடவடிக்கை தாதியர்களின் ஊக்கத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் தாதியர்களை மீண்டும் நாட்டிற்கு திரும்ப வரச் செய்யும் என்றார் அவர்.
மேலும், இளம் தலைமுறையினரை இந்தத் துறைக்கு கவர்ந்திழுக்கவும் இது உதவும் என அவர் கூறினார்.
தவிர, வேலைச்சோர்வு அல்லது “burnout” பிரச்னைகளை குறைக்கவும், நாட்டின் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இது உதவும்.
எனினும், இது வெறும் பரிந்துரை வடிவிலேயே நின்று விடக் கூடாது; மாறாக, தற்போதைய ஆட்சி காலம் முடிவதற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
தாதியர்களின் நலன் பாதுகாக்கப்படுவது, நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை உறுதிச் செய்யும் முக்கிய அம்சமாகும் எனவும் லிங்கேஷ்வரன் தெரிவித்தார்.
அதிகச் சம்பளம் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளால் ஈர்க்கப்பட்டு தாதியர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதைத் தடுக்க, அவர்களுக்கான சம்பளம் மற்றும் அலனவ்ஸ் தொகையை உயர்த்த பரிசீலிக்கப்படுமென, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்ளி அஹ்மாட் முன்னதாக கூறியிருந்தார்.



