
சென்னை, மே-13-தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது தனிப்பட்ட ஜோதிடரை அரசு அதிகாரியாக நியமித்திருப்பது அவரது கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் என்கிற ரிக்கி பண்டிட்டை முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) விஜய் நியமித்துள்ளார்.
TVK கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் ராதன் பண்டிட், கடந்த தேர்தலின் போது விஜய்யின் வெற்றியைத் துல்லியமாகக் கணித்தவர் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நியமனத்திற்கு விஜய்யின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தரப்பில் “மதச்சார்பற்ற ஒரு அரசில் ஜோதிடருக்கு அதிகாரப்பூர்வ பதவி எதற்கு?” என எம்.பி சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தை மற்றும் இடதுசாரிகளோ, இது அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு எதிரானது என்றும், அரசு நிர்வாகத்தில் இத்தகைய நியமனங்கள் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, தனது கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த முடிவு, தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் இந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இந்த நியமனத்தை முதல்வர் விஜய் மாற்றிக்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



