
ஜோகூர் பாரு, ஜூன் -24-நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, மடானி அரசாங்கம் 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியுதவித் திட்டங்களை தொடக்கியுள்ளது.
இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா வாயிலாக இந்நிதி விநியோகிக்கப்படுவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக, ஜோகூர் பாரு, ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் கல்வி அமைச்சர் ஃபாட்லீன சிடேக் மற்றும் துணையமைச்சர் வோங் கா வோ ஆகியோரின் முன்னிலையில் Perabot MADANI, Kalvi MADANI என 2 திட்டங்கள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய ரமணன், _“மடானி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமூகத்தின், குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் பள்ளி வசதிகள் எக்காரணம் கொண்டும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”_ எனத் தெரிவித்தார்.
இவ்வுதவிகள் குறித்த மேல் விவரங்களை மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
இவ்வேளை நேற்றைய நிகழ்வில் அமைச்சர் ரமணன் 2 நற்செய்திகளையும் அறிவித்ததாக, ரவீந்திரன் சொன்னார்.
வறுமைச் சுழற்சியை உடைப்பதற்கும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கக்கூடிய திறன்மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த இளைய தலைமுறையை உருவாக்குவதற்கும் கல்விக்கான முதலீடே மிகச் சிறந்த, ஆற்றல்மிக்க வழிமுறையாகும் என ரமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



