
அலோர் காஜா, ஜூலை-3-மலாக்கா, அலோர் காஜாவில் நாய் கடித்ததாகத் தனது அண்டை வீட்டுக்காரர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கை Majistret நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பி. தேவிகா என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், கடந்த ஆண்டு ஜூன் 19 அம் தேதி தம்மைத் தாக்கியதாக எஸ். ராமாயி எனும் பெண்மணி குற்றம் சாட்டியிருந்தார்.
தேவிகா அந்த நாயைக் கண்காணிப்பு ஏதுமின்றி வீட்டின் வெளியே சுதந்திரமாகத் திரிய விட்டதாகக் குற்றம் சுமத்திய ராமாயி, நாய் தாக்கிய பின் உடம்பின் சில பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், வலது மணிக்கட்டில் காயம் அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அந்த நாயின் உரிமையாளர் தாம் அல்ல என்றும், ராமாயி அவ்வழக்கைத் தொடர தூண்டப்பட்டதாக தேவிகா தமது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தேவிகாவுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க ராமாயி தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்தார்.
அச்சம்பவம் உண்மையில் எங்கு நடந்தது என்பது குறித்த ராமாயியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்தன. மேலும், அந்த நாய் கடந்த காலத்தில் யாரையாவது தாக்கியதாகவோ அல்லது கடித்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.



