
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், ‘Amphetamine’ மற்றும் ‘Benzodiazepine’ ஆகிய போதைப்பொருட்களின் தடயங்கள் கண்டறியப்பட்டன.
தாய் கர்ப்பமாக இருந்தபோதே குழந்தை இந்த போதைப்பொருட்களின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 30 வயது தாயாரைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் ‘Benzodiazepines’ போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
வேலை ஏதும் செய்யாத அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன் குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து கோத்தா பாரு மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.



