
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 — கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சுவர்ண பந்தன மகா கும்பாபிஷேகம், அன்று காலை 9 மணி முதல் 10.40 மணிக்குள்ளான சுப வேளையில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த ISKCON Senai குழுவினர் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக பெருமளவில் உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்றைய தினம் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வரிசையில் நின்று அன்னதானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். வாழை இலையில் அமர்ந்து உணவருந்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, அங்கு உணவருந்த முடியாதவர்கள் அன்னதானத்தைப் பொட்டலமாகவும் பெற்றுச் செல்லலாம் என ISKCON Senai தெரிவித்துள்ளது.
எனவே, கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



