
இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-9-நிறுவனங்களுக்கான e-Invoicing முறை அமுலாக்கம் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முதலாளிமார்களின் 2 விழுக்காடு EPF பங்களிப்பு தொடர்பான முடிவுகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு இணக்கம் காணப்பட்டதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அமைச்சரவை இந்த இரு நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவற்றை ஒத்திவைக்கும் திசையில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
e-Invoicing அமுலாக்கத்தால் நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமையை நிதியமைச்சு மீண்டும் பரிசீலிக்கும் என்றும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிறுவனங்களின் 2 விழுக்காடு EPF பங்களிப்பும் அதேபோல் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றார் அவர்.
e-Invoicing தொடர்பாக, நிறுவனங்கள் அபராதமின்றி திருத்தங்களைச் செய்யும் சலுகைக் காலம் அடுத்தாண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.



