
பாங்கி, ஆகஸ்.21- கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான FELDA தொடர்பான விசாரணை அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளியிடும். சிறப்புப் பணிக் குழு தற்போது முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகிறது. அது நிறைவடைந்ததும் அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த கால பிரச்சினைகளைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், FELDA-வின் நிர்வாகத்தை மேம்படுத்தும் கோணத்திலும் விசாரணைகள் இருக்கின்றன. நிர்வாகத்தை மேம்படுத்த கடந்த காலச் சிக்கல்கலைக் கண்டறிவது இயல்பானதுதான். ஆனால், தற்போதைய நிர்வாகம் மற்றும் இனிவரும் காலத்திற்கான நடவடிக்கைகள் மிக முக்கியம் என பிரதமர் வலியுறுத்தினார். பாங்கியில் FELDA உயர்மட்ட நிர்வாகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
தாபூங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை, FELDA தொடர்பான தற்போதைய விவகாரங்கள் குறித்த விசாரணைகளை முழுமையாக மேற்கொள்ளுமாறு முன்னதாக மாமன்னர் Sultan Ibrahim ஆணையிட்டிருந்தார். அதேவேளை தவறு செய்ததாகக் கண்டறியப்படும் எந்தத் தரப்பினரிடமும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தியிருந்தார்.
அவ்விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போது அரசாங்கம் பரிசீலித்து வரும் சிறப்புப் பணிக் குழுவின் அறிக்கை குறித்தும் அன்வார் மாமன்னரிடம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



