
சொங்க்லா, ஆகஸ்ட்.04 – தாய்லாந்து, சொங்க்லாவில் உள்ள Hat Yai ரயில் நிலையத்தில் 87 கிலோகிராம் syabu வகை போதைப்பொருளைக் கடத்த முயன்றது தொடர்பில் மூன்று மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருளை சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று பயணப் பெட்டிகளிலும் மூன்று முதுகுப் பைகளிலும் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து ரயில்வே காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உள்ளிட்டவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் அம்மூவரும் பிடிபட்டனர். Bangkokகில் இருந்து ரயிலில் பயணித்த அவர்கள் Hat Yai ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் தெரிவித்தார்.
Shabu அல்லது ‘ஐஸ்’ (ice) போதைப்பொருளை மலேசியாவிற்குள் கடத்துவதற்காக கும்பலொன்று தலா 8,000 மலேசிய ரிங்கிட் தருவதாக உறுதியளித்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். அம்மூவர் மீதும் விநியோகத்திற்காக போதைப்பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கடத்துதல் ஆகிய கூட்டுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 1.5 மில்லியன் பாத் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர், அதில் தொடர்புடையவர்கள் என மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.



