
கோலாலம்பூர், ஜூன்-3,SPM தேர்வில் மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தைப் பதிவுச் செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நிர்வாகக் கெடுபிடிகளைக் கல்வி அமைச்சு உடனடியாகக் களைய வேண்டும் என, பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களில், 2024-ல் SPM தேர்வின் போது வெறும் 7,609 பேர் மட்டுமே தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்துள்ளனர்.
SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா அண்மையில் இதனை அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த 45 விழுக்காடு வீழ்ச்சி கவலையளிப்பதாகக் கூறியுள்ள சிவமலர், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கான அணுகல்முறை மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து இது பல கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டார்.
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடப் பதிவை எளிதாக்க வேண்டும் என 2023-லேயே பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், கடந்த ஆண்டு சிலாங்கூர் பாங்கியில் 4 மாணவர்களுக்குப் பதிவுச் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கல்வி பெறும் அடிப்படை உரிமை, அதிகாரத்துவத்திற்குப் பலியாகக் கூடாது என்றும், கல்வி அமைச்சு முறையான மற்றும் நிலையான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்றும் சிவமலர் கணபதி கேட்டுக் கொண்டுள்ளார்.



