
தோக்யோ, மே-21 – எதிர்காலத்தைக் கணிக்கும் ஜப்பானிய மங்கா கலைஞரான ரியோ டாட்சுகி, வரும் ஜூலையில் ஜப்பான் ஒரு பேரழிவைச் சந்திக்கும் என கணித்து பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே பல சம்பவங்களை துல்லியமாகக் கணித்தவர் என்பதால், அவரின் இப்புதிய ‘எச்சரிக்கை’ சுற்றுப் பயணிகள் மற்றும் பொது மக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2011 Tohoku பூகம்பம், 1995 Kobe நிலநடுக்கம்… இவ்வளவு ஏன், பிரிட்டன் பாடகர் Freedie Mercury-யின் மரணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை கூட அவர் முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துக் கூறியதாகக் கூறப்படுகிறது
எனவே அறிவியல் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் பலர் அவரது கணிப்பை நம்பகமானதாகக் கருதுகின்றனர்.
70 வயதாகும் டாட்சுகி முதன் முதலில் தனது கணிப்புகளை 1999-ல் The Future I Saw எனும் புத்தகத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் தனது புத்தகத்தின் திருத்தப்பட்ட 2021 பதிப்பில், 2025 ஜூலையில் ஜப்பானுக்கு அருகில் கடலுக்கடியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாட்சுகி குறிப்பிட்டுள்ளார்.
2011-ல் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு பெரிய சுனாமியை அது ஏற்படுத்தும்; மேலும் கடல் நீரும் கொதிக்கும் என அவர் கூறியுள்ளார்.
கடல் நீர் கொதிக்கும் என டாட்சுகி கூறியது, கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதைத்தான் என பலர் யூகிக்கின்றனர்.
இதனிடையே, டாட்சுகியின் இந்த கணிப்பால் சுற்றுலாத் துறை பாதிப்பை உணரத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக ஹோங் கோங்கில் உள்ள சுற்றுலா நிறுவனங்கள், அண்மைய ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஜப்பானுக்கான முன்பதிவுகளில் 50 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கின்றன.
டாட்சுவின் ‘கணிப்பால்’ சுற்றுப் பயணிகள் அதிக எச்சரிக்கையோடும் குழப்பத்தோடும் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்தி வைக்கிறார்கள் அல்லது இரத்து செய்கிறார்கள்.
அண்மைய நில அதிர்வு நடவடிக்கைகள் காரணமாக விழிப்புடன் இருக்குமாறு, தோக்யோவில் உள்ள சீனத் தூதரகம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்ததும் இங்கு கவனிக்கப்படுகிறது.
இதையடுத்து சமூக ஊடகங்களில் #July2025Prediction போன்ற _hashtags_களின் கீழ் பதிவுகள் அதிகரித்துள்ளன.