ரியாத், ஏப்ரல்-28, அனைத்துலகப் பொருளாதார ஆய்வரங்கின் (WEF) சிறப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவூதி அரேபியா சென்று சேர்ந்துள்ளார்.
3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் இன்று அதிகாலை ரியாத்தில் உள்ள மன்னர் காலீட் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்தார்.
‘உலகலாய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான எரிசக்தி’ என்ற கருப்பொருளில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு அச்சிறப்புக் கூட்டம் நடக்கிறது.
அம்மாநாட்டின் தொடக்க விழாவின் போது முக்கிய அம்சமாக பன்னாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வில் பங்குக்கொள்ள அன்வாருக்கு, சவூதி பட்டத்து இளவரசரும் பிரதமருமான Mohammed bin Salman தனிப்பட்ட அழைப்பு விடுத்து கௌரவித்திருப்பதாக, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் கூறினார்.
மாநாட்டின் போது, அனைத்துலக தொழில்துறை உற்பத்தி வல்லுநர்களைச் சந்தித்து, மலேசியாவில் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார வாய்ப்புகள் குறித்தும் டத்தோ ஸ்ரீ அன்வார் பகிர்ந்துக் கொள்ளவிருக்கின்றார்.
மலேசியா -சவூதி இடையிலான அணுக்கமான உறவை மேலும் வலுப்படுத்தவும் பிரதமரின் இப்பயணம் பயன்படும் என மொஹமட் ஹசான் நம்பிக்கைத் தெரிவித்தார்.