
குளுவாங், ஜூன்-3–ஜோகூர் குளுவாங்கில் ஐந்து பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) உத்தரவிட்டுள்ளது.
சட்டத்துறைத் தலைவர் முகமட் துசுக்கி மொக்தார் (Dusuki Mokhtar), காவல்துறையின் விசாரணை முடிவுகளை ஆய்வு செய்த பிறகே இறுதி குற்றச்சாட்டுகள் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, 19 வயது இளைஞர் ஓட்டிய மெர்சிடீஸ் காரும், அவரது 22 வயது சகோதரர் ஓட்டிய BMW காரும் சாலையில் வேகப் பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அப்போது BMW கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலைக்குள் புகுந்து பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது இளைஞரின் தடுப்புக் காவல் காலம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



