ஜியோர்ஜ்டவுன், மார்ச்-12 – பினாங்கு, ஜியோர்ஜ்டவுனில் நான்கு நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிங்கப்பூர் ஆடவர், ஜாலான் பாயா தெருபோங் மலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அங்கு 45 மீட்டர் பள்ளத்தில் தனது காருக்கு அருகில் 29 வயது ‘Chew Wei Fung’ங்கின் சடலம் கண்டெக்கப்பட்டது.
சடலம் கிடப்பதைக் கண்டு பொது மக்கள் அவசர எண்ணுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
சடலம் மீட்கப்பட்ட இடத்தையும், சடலத்தின் நிலையையும் வைத்துப் பார்க்கும் போது, அவர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக, தீமோர் லாவோட் மாவட்ட தீயணைப்பு மீட்புத் துறையின் அதிகாரி முஸ்ஸமர் முகமட் சலே தெரிவித்தார்.
அவரின் உடலில் ஏராளமான காயங்கள் காணப்பட்டன; அதன் மூலம், கார் பள்ளத்தில் விழுந்த போது ஒன்று அவர் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் அல்லது அவராகவே காரில் இருந்து வெளியேறி இருக்கலாம் என யூகிக்க முடிவதாக முஸ்ஸமர் முகமட் சலே கூறினார்.
சடலம் சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், ரெலாவுக்குத் திரும்பும் வழியில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு தான் Wei Fung-ங்கை கடைசியாக தொடர்புக் கொண்டதாக அவரின் நண்பர் கூறினார்.
அப்போது ‘WeChat’-டில் உரையாடிக் கொண்டிருந்த ‘Wei Fung’, திடீரென அமைதியாகி எதிர் திசையில் இருந்து பதிலேதும் வரவில்லை என்றார் அவர்.