கட்டார் ஆசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற அறுவருக்கும் சிறப்பு செய்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம்

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-19, அண்மையில் கட்டாரில் நடைபெற்ற ஆசிய சிலம்பப் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களைக் குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்த 6 வீரர்-வீராங்கனைகளை, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அழைத்து சிறப்புச் செய்தது.
அவர்கள் முறையே பிரகாஷ், ஷஸ்திவேனா, லீனா ஸ்ரீ, கவித்திரா, டர்னிஷா மற்றும் ரனிஷா ஆகியோர் ஆவர்.
அற்புதமாக விளையாடி ஆளுக்கு 2 தங்கப் பதக்கங்களைக் குவித்து, ஆசிய பொது சிலம்பப் போட்டியில், மலேசியா சாம்பியன் ஆவதற்கு அவர்கள் துணைபுரிந்தனர்.
இந்திய பாரம்பரிய தற்காப்புக் கலையின் புகழை உலக அரங்கில் பரவச் செய்த அவர்களின் அர்ப்பணிப்பையும் திறமையையும் பாராட்டி, ரொக்க அன்பளிப்பும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr ஆர்.லிங்கேஷ்வரன் தலைமையில் அப்பாராட்டு விழா நடைபெற்றது.
விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பு, அதன் மூலம் கிடைத்த வெற்றியை இருவரும் பாராட்டியதோடு பெருமிதமும் தெரிவித்தனர்.
சிலம்பம் போன்ற பழமையான மரபுகள் நவீன யுகத்திலும் கட்டிக்காகக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் திறமையாளர்களுக்கு அறப்பணி வாரியத்தின் அசைக்க முடியாத ஆதரவுக்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும்.
அவர்களின் வெற்றியானது, பாரம்பரியத்தைக் காப்பதற்கும், கடுமையாக உழைக்கவும், சிறந்து விளங்குவதற்கும் இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துகாட்டாகவும் உந்துச் சக்தியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.
சிலம்ப அணி வரும் காலங்களிலும் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்கட்டுமென ராயரும் லிங்கேஷும் வாழ்த்தினர்.