
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும்.
இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து வருகிறது.
அவ்வகையில் முதல் முன்னெடுப்பாக, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வுப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தோடு மலேசிய சினேஹம் அமைப்பு மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய துறை சார்ந்த நிபுணர்களோடு ஒருங்கிணைந்து இந்தப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அதிகமான மன அழுத்தம் கொண்டவர்களாக இல்லாமலிருப்பதை உறுதிச் செய்வதே இப்பட்டறையின் நோக்கமாகும்.
இம்முன்னெடுப்பின் முதல் கட்டமாக கெடா, தேசிய வகை கூலிம் தமிழ்ப்பள்ளியில் கடந்த மே 24-ஆம் தேதி அப்பட்டறை நடத்தப்பட்டது.
இது முற்றிலும் மனோவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.
ஆசிரியர்களின் மனவள நிலை அதில் அறியப்பட்டது; அவர்களிடமிருந்து பல கருத்துகளும் பெறப்பட்டன.
இவ்வாறு மற்ற இடங்களிலும் பெறப்படும் தகவல்கள் மற்றும் கருத்துகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என சண்முகம் சொன்னார்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இந்தியச் சமூக நலனுக்கான முன்னணி நபர்கள்; அவர்களது மனநலம் சிறப்பாக இருத்தலே சமூகத்தின் நலத்திற்கான அடிப்படை; ஆகையால், இந்த மனவள விழிப்புணர்வுப் பட்டறை ஒட்டுமொத்த சமூக மாற்றத்தின் முதல் படியாகக் கொள்ளலாம்.
இந்த நடவடிக்கைகள் இந்தியச் சமூகத்தின் எதிர்கால நலனுக்கான ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதாக சண்முகம் கூறினார்.