கோலாலம்பூர், ஜன 8 – கிளந்தானில் பாசிர் புத்தே மற்றும் திரங்கானுவில் பெசுட் ஆகிய மாவட்டங்களில் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள் திருடி வந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டதோடு இதில் சம்பந்தப்பட்ட எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 17 வயதுடைய அந்த மாணவர்கள் கடந்த மாதத்திலிருந்து இம்மாதம்வரை ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததை ஒப்புக்கொண்டதாக பாசிர் புத்தே போலீஸ் தலைவர் சாய்சூல் ரிசால் சகாரியா ஒப்புக் கொண்டார்.
நெல் வயல் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உபரி பாகங்களை அகற்றி அவற்றை விற்பனை செய்து வந்ததாக அவர் தெரிவித்தார். பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போனவை என புகார் செய்யப்பட்டதோடு குற்றவியல் சட்டத்தின் 379ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். அந்த மூன்று மாணவர்களையும் ஜனவரி 10 ஆம் தேதி வரை தடுத்து வைக்கும் உத்தரவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெற்றிருப்பதாகவும் சாய்சூல் ரிசால் கூறினார்.