கோலாலம்பூர், நவ 24 – தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் நீதித்துறையின் முடிவுக்கு மதிப்பளிப்போம் என்று மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் கூறியுள்ளார்.
தமிழ், சீன தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக ஒரு சில அமைப்புகள் வழக்கு தொடுத்திருந்தன. நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. ஆகையால் இப்பள்ளிகள் குறித்து எந்த தரப்பும் கேள்வி எழுப்ப முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் முறையீட்டு நீதிமன்றமும் நிலை நிறுத்தியுள்ளது.
இரு நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்.
அதே வேளையில் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதை தான் மஇகா கல்விக் குழு வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கு மஇகா தொடர்ந்து அரணாக செயல்படும். இது தான் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகாவின் இலக்காக உள்ளது. ஆகவே நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை காக்க மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று டத்தோ நெல்சன் தெரிவித்தார்.