
ஆக்ரா,ஜூலை.16-இந்தியா, ஆக்ராவில் குளிர்சாதனப் பெட்டிக்குள் இயற்கையாக உருவான பனிக்கட்டியின் அமைப்பு, சிவலிங்கத்தைப் போல் இருந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடொன்றின் குளிர்சாதனப் பெட்டிக்குள் சிவலிங்கம் போல் காணப்பட்ட பனிக்கட்டியின் அமைப்பைக் கண்டு வீட்டின் இருந்தவர்களைப் பரவசத்தில் ஆழ்ந்தனர். அச்செய்தி சுற்று வட்டாரத்தில் பரவ, மக்கள் அவ்வீட்டின் முன் குவியத் தொடங்கி விட்டனர்.
அவர்களில் சிலர் பிரார்த்தனை மற்றும் நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, “ஹர் ஹர் மஹாதேவ்” என்று கோஷமிட்டு வீட்டை ஒரு பக்தித் தலமாகவே மாற்றி விட்டனர். பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி சிவலிங்கத்தையும், குளிர்சாதனப் பெட்டிக்குள் காணப்பட்ட பனிக்கட்டியையும் பலர் ஒப்பிட்டுப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்து பேசும் பொருளாக மாறியுள்ளது. சிலர் அதைச் சிவபெருமானுடன் தொடர்புடைய ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதும் வேளையில், மற்றவர்களோ குளிர்சாதனப் பெட்டியில் உறைபனிச் சூழலால் இயற்கையாக உருவான பனி அமைப்பே அதுவெனக் கூறுகின்றனர். அச்சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.



