
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்த Nur Qaira Alisha Ahmad ‘Ilwan-னின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கெடா மாநில கல்வி இலாகா விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
சிறுமிக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இதயக் கோளாறு இருந்ததற்கான மருத்துவக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் அவரை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கப் பணித்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.



