
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24- கெப்போங்கில் இம்மாதத் தொடக்கத்தில் மூதாட்டி ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்றதாகக் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை சுமார் 7.51 மணியளவில், செந்துலில் உள்ள Taman Pusat Kepongங்கில் உள்ள ஒரு பந்தயக் கடையில் முன் 62 வயதான Gan Siew Teen என்பவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்றதன் மூலம் அவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக Ang Kam Tong மீது குற்றம் சாட்டப்பட்டது.
அக்குற்றச்சாட்டை 58 வயதான Ang மறுத்தார். அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Ang கைது செய்யப்பட்டபோது தப்பி ஓட முயன்றதாகக் கூறி, அவருக்குப் பிணை மறுக்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மூன்றாம் நிலை தீக்காயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தனது கட்சிக்காரர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று வாதிட்ட Angங்கின் வழக்கறிஞர், திருமணம் ஆகாத Ang, இ-ஹெய்லிங் ஓட்டுநராக வேலை செய்வதால் நிலையான வருமானம் இல்லை எனக் கூறி பிணை கோரினார்.
அதனை அடுத்து, ஒரு ஜாமீனுடன் 15,000 ரிங்கிட் பிணைத் தொகையை அனுமதித்து நீதிமன்றம், செப்டம்பர் 25 ஆம் தேதியை மறு விசாரணைக்கானத் தேதியாக நிர்ணயித்தது.



