
கோலாலம்பூர், ஜூன்-19 – ஏப்ரல் மாதம் செராஸ் இடைநிலைப்பள்ளியில் தனது சக மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவன், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.
தாக்குதல் நடத்தியவன், பாதிக்கப்பட்ட மாணவனின் கழுத்தைப் பின்னாலிருந்து நெரித்து, அவனை வாய்மொழியாகத் தகராறுக்கு தூண்டியதாகக் போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் பள்ளி கூட்டுறவுச் சங்கத்தின் முன்பாக நிகழ்ந்துள்ளது. சிற்றுண்டி நிலையத்தில் இருக்கை ஏற்பாடு தொடர்பான தவறான புரிதலால் இது ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவனும், தாக்குதல் நடத்தியவனும் முதலாம் படிவ மாணவர்கள் என்பதோடு இது தொடர்பான புகார் ஏப்ரல் 16 ஆம் தேதி கிடைத்ததாக செராஸ் போலீஸ் நிலையத் தலைவர் உதவி கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் அன்றே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஏப்ரல் 20 ஆம் தேதியன்று போலீஸ் , பள்ளி நிர்வாகம் மற்றும் பாதுகாவலர்கள் அடங்கிய முத்தரப்புக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, சந்தேக நபர் மீது எச்சரிக்கை மற்றும் பள்ளி இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரோஸடி டாவுட் தெரிவித்தார்.



