
சபாக் பெர்ணாம், ஆகஸ்ட்-15,சிலாங்கூர், சுங்கை பெசார் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த JPS எனப்படும் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்குச் சொந்தமான SUV இரக வாகனத்திற்குள் 49 வயதுடைய ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கிள்ளான்–தெலுக் இந்தான் (Jalan Klang-Teluk Intan) சாலையில் நிகழ்ந்துள்ளது.
காரின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பது குறித்து நேற்று மாலை 6.36 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
இதையடுத்து சுங்கை பெசார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்னதாகவே, பொது மக்கள் காரின் கதவைத் திறந்திருந்தனர்.
காரில் இருந்த அந்த 49 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவர் JPS துறையின் ஊழியர் என நம்பப்படும் வேளையில், மேல் விசாரணைக்காக உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



