
கோலாலம்பூர், ஜூலை-24-சிலாங்கூர், Seri Kembangan உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் வெளியே ஏற்பட்ட மோதலில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 3 ஆம் தேதி பிற்பகலில் பாதிக்கப்பட்ட மாணவர் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக Serdang காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Muhamad Farid Ahmad தெரிவித்தார். அச்சம்பவம் தொடர்பான காணொளியும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
பள்ளியில் உடன் பயிலும் மாணவர்கள் சிலர் சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து அவரைச் சூழ்ந்து தாக்கியுள்ளனர். அதனால் அம்மாணவரின் உதடு மற்றும் முழங்கால்களில் காயங்களும் உடல் முழுவதும் சிராய்ப்புகளும் ஏற்பட்டன.
சண்டையைத் தடுக்க முயன்ற அம்மாணவரின் தந்தையும் தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். அவரது கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டதாக Muhamad Farid விளக்கினார்.
அச்சம்பவம் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.
அதே சமயம் வலைப்பின்னல் வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அது 5,00,000 ரிங்கிட் வரை அபராதம், அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்பட வகை செய்கிறது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் Serdang காவல் துறைத் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.



