
பினாங்கு, ஜூலை 22 – பினாங்கு ஜார்ஜ்டவுனிலுள்ள ஒரு வீட்டில் இரண்டு ஆண்களை போலித் துப்பாக்கி காட்டி மிரட்டிய 18 வயதுடைய காதல் ஜோடியைப் போலீசார் கைது செய்து 4 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த உத்தரவை ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தின்ன் கீழ், குற்றவியல் மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு ஜாலான் துன் டாக்டர் அவாங் பகுதியிலுள்ள குறைந்த கட்டண விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, உண்மையான துப்பாக்கியைப் போல் தோற்றமளிக்கும் ஒரு போலித் துப்பாக்கியும், ஒரு தோட்டாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டு வாடகையாளரான சந்தேக நபர் தனது காதலியுடன் தகராறு செய்ததை வீட்டில் இருந்த இருவர் தட்டிக் கேட்டதால், அவர்களை நோக்கி போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பின்னர் இருவரும் அங்கிருந்து வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



