
கோலாலம்பூர், ஜூலை-3-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் மடானி தேசிய டேக்ஸ் புதுப்பிப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டம், நாட்டின் டேக்ஸி சேவையை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் புதிய முயற்சியாகும் என்றார் அவர்.
2026 வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக, மலேசியத் தயாரிப்பிலான புதிய டேக்ஸிகளை வாங்கும் டேக்ஸி மற்றும் வாடகைக் கார் உரிமையாளர்களுக்கு 100 விழுக்காடு கலால் வரி மற்றும் விற்பனை வரி விலக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் புதிய வாகனங்களை வாங்கும் செலவு குறைந்து, பழைய டேக்ஸி படையை விரைவாக மாற்ற முடியும் எனவும் அவர் சொன்னார்.
போக்குவரத்து அமைச்சின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், புரோட்டான், DRB-HICOM குழுமத்தின் EON-Avis, EON-Tras மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
டேக்ஸி ஓட்டுநர்களுக்கு தங்களின் வசதிக்கேற்ப நிதியுதவி திட்டங்களும் வழங்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சின் கொள்முதல் மற்றும் நிதிப் பிரிவு செயலாளர் குணா அருளாளன் டேவிட் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் டேக்ஸி ஓட்டுநர்கள் குறைந்த பராமரிப்பு செலவு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான வாகனங்களைப் பெறுவதுடன், பயணிகளும் தரமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான டேக்ஸி சேவையை அனுபவிக்க முடியும் என்றார் அவர்.



