
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது.
தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம் சற்று பாதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தில் நீர் விநியோகம் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக, மலாக்கா அரசாங்கச் செயலாளர் Azhar Arshad தெரிவித்தார்.
இருந்தாலும், நீர் கையிருப்பு தொடர்ந்து போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
“இதில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், ஏரிகள் மற்றும் குளங்களைப் பயன்படுத்துதல், மற்றும் மூல நீர்வளங்களை தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை அடங்கும்” என்றார் அவர்.
கசிவு கட்டுப்பாடு மற்றும் விநியோக அமைப்பை மேம்படுத்துவதன் மூலம் நீர் இழப்புகளை குறைக்க முயற்சிகளும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக Azhar சொன்னார்.



