
கூச்சிங், ஜூன் 24 – மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமை ( Yang di-Pertuan Agong, Sultan Ibrahim) அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 46 வயதுடைய பாதுகாப்பு காவலருக்கு, கூச்சிங் நீதிமன்றம் 8 மாத சிறைத்தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
சந்தேக நபர் மீது தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, தனது முகநூல் கணக்கின் மூலம் மாமன்னரையும் நாட்டின் தலைவர்களையும் அவமதிக்கும் வகையிலான கருத்தைப் பதிவிட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
அந்தப் பதிவு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கடந்த ஜூன் 17-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சமூக ஊடகங்களில் படித்த விவாதங்கள் மற்றும் கருத்துகளின் தாக்கத்தால் அந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறி, தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.



