
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான FBI வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் மற்றும் ட்ரம்பின் 80-ஆவது பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு South Lawn White House-சில் நடைபெற்ற UFC தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக FBI இயக்குனர் காஷ் பட்டேல் (Kash Patel) தெரிவித்துள்ளார்.
அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வை குலைக்கும் நோக்கில் இந்தச் சதி தீட்டப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க நீதித்துறை ஒருங்கிணைத்த அதிரடி சோதனைகளின் மூலம், மொத்தமாக 23 பேர் அடையாளம் காணப்பட்டு இதுவரை 5 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதற்கட்டமாக, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளால் அடுத்தகட்டத் தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் முதல் டிக் டோக் செயலி மூலம் இந்தச் சதித்திட்டம் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக Signal என்றச் செயலியைப் பயன்படுத்தி தாக்குதல் யுக்திகளை அவர்கள் விரிவாக விவாதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்தல் மற்றும் கூட்டரசு அதிகாரிகளைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



