வாஷிங்டன், டிசம்பர் 14 – அமெரிக்காவில், விற்கப்பட்ட அல்லது பயன்பாட்டில் உள்ள 20 லட்சம் வாகனங்களை மீட்டுக் கொள்வதாக, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அறிவித்துள்ளது.
தனது வாகனங்களிலுள்ள, “ஆட்டோபைலட்” அல்லது தன் இயக்க அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும், புதிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவவும் டெஸ்லா அந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
டெஸ்லா வாகனங்கள், “ஆட்டோபைலட்” ஓட்டுனர் உதவி முறையை பயன்படுத்தும் போது, ஓட்டுனர்கள் கவனம் செலுத்துவதை போதுமான அளவில் உறுதிச் செய்கிறதா என்பதை கண்டறிய, கடந்த ஈராண்டுகளாக, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்கிற்கு சொந்தமான டொஸ்லா நிறுவனத்தின் வாகனங்களை, அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
டெஸ்லா ஆட்டோபைலட் வாகனங்களை உட்படுத்திய, ஒரு டசனுக்கும் அதிகமான விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு, அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அந்த கண்காணிப்பை தொடங்கியது.
இந்நிலையில், தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி இருக்கும் ஆட்டோபைலட் மென்பொருள் அமைப்பின் கட்டுப்பாடுகள், “ஒட்டுனரின் தவறான பயன்பாட்டை தடுக்க போதுமானதாக இல்லை” என டெஸ்லா கூறியுள்ளது.
அதனால், அந்த முறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை டெஸ்லா மேற்கொண்டுள்ளது.