
சிங்கப்பூர், மே-12-சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மசூதிகளுக்குப் பன்றி இறைச்சி அடங்கிய கடிதங்களை அனுப்பிய 62 வயது ஆடவருக்கு, 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Bill Tan Keng Hwee என்ற அந்நபர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7 மசூதிகளுக்குப் பன்றி இறைச்சித் துண்டுகள் அடங்கிய கடிதங்களை அனுப்பினார்.
ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.
அந்தப் பெண்ணின் தொடர்பு விவரங்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த Tan, மசூதி நிர்வாகத்தினர் கோபமடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு தொந்தரவு செய்வார்கள் என எதிர்பார்த்தார்.
ஆனால், மசூதி நிர்வாகிகள் நிதானத்துடன் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூரின் பல்லின சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இத்தகைய செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மத உணர்வுகளைப் புண்படுத்தியது மற்றும் பெண்ணைத் துன்புறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



