![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-13-Mar-2024-09-37-AM-8092.jpg)
சிங்கப்பூர், மார்ச்-12, சிங்கப்பூரின் Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடிகள் வழியாக கார்களில் பயணிப்பவர்கள், மார்ச் 19-ஆம் தேதி முதல் தங்கள் கடப்பிதழ்களுக்குப் பதிலாக QR குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.
அந்த QR குறியீடுகளை தனிநபர்களும், ஒரே வாகனத்தில் பயணம் செய்யும் 10 பேர் வரையிலான குழுக்களும் பயன்படுத்தி குடிநுழைவுச் சாவடியைக் கடந்துச் செல்ல முடியும்.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரத் தரப்பு ICA இன்று அதனை கூறியது.
இந்த புதிய முன்னெடுப்பில், பயணிகள் முதலில் MyICA கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்களின் கடப்பிதழ் விவரங்களை நிரப்ப வேண்டும்.
பிறகு, பயணிகள் தனிப்பட்ட QR குறியீடு அல்லது ஒரு குழுவுக்கான QR குறியீட்டை தேர்வு செய்யலாம்.
என்றாலும், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகை தருபவர்கள் மற்றும் சிங்கப்பூருக்கு கடந்த முறை சென்றதிலிருந்து வேறு கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் நுழைபவர்கள் குடிநுழைவு அனுமதிக்கு தங்கள் கடப்பிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அடுத்தடுத்த பயணங்களில் குடிநுழைவு அனுமதிக்கு QR குறியீடுகளைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான கார் பயணிகள் குடிநுழைவு அனுமதிக்கு QR Code-டைப் பயன்படுத்தினால், ஒட்டுமொத்த காத்திருப்பு நேரத்தை 30%-டுக்கும் அதிகமாக குறைக்கலாம் என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
நான்கு பயணிகளைக் கொண்ட கார்களுக்கு சுமார் 20 வினாடிகள் மற்றும் 10 பயணிகளைக் கொண்ட கார்களுக்கு சுமார் 1 நிமிடம் எனவும் ICA கணித்துள்ளது.