
கோலாலம்பூர், ஜூலை.21-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர் சார்ந்த பொழுதுபோக்கு இடங்களில் தற்போது leptospirosis பாதிப்புகள் காணப்படுவதாகக் கூறப்படுவதை மாநில சுகாதாரத் துறை மறுத்துள்ளது.
எலியின் சிறுநீர் காரணமாக ஏற்படும் leptospirosis பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இம்மாதத் தொடக்கத்தில் நோயாளி ஒருவர் மருத்துவமனையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
இருப்பினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் அந்நோயாளிக்குத் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தின.
அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதாகவும் சிகிச்சைக்காக பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெளிவுபடுத்தியது.
உலு சிலாங்கூரில் உள்ள நீர் சார்ந்த பொழுதுபோக்கு இடம் ஒன்றில் நீச்சல் அடித்த பிறகு தனது கணவருக்கு leptospirosis பாதிப்பு ஏற்பட்டதாக பெண் ஒருவர் முன்னதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட 127 லெப்டோஸ்பிரோசிஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 26 சம்பவங்கள் நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என அத்துறை தகவல் வெளியிட்டது.
சம்பந்தப்பட்ட இடங்களில் இடர் மதிப்பீடுகளை மேற்கொள்வது, ஆய்வுக்காக நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரிப்பது, எச்சரிக்கைப் பலகைகளைப் பொருத்துவது என பல நடாவ்டிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் அது சுட்டிக் காட்டியது.
அதே சமயம் பொழுதுபோக்கு இடங்களின் தூய்மையைப் பேணுமாறும், உடலில் திறந்த காயங்கள் இருந்தால் நீர் சார்ந்த நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அது பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.



