
கோலாலம்பூர், ஜூன் 2 – செமினி , சுங்கை புருன் தொழிற்பேட்டையில், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்காக டிரான்ஸ்போர்மர் எனப்படும் மின்மாற்றிகள் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று தீப்பிடித்தது.
அதிகாலை மணி 4.29க்கு தமக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து செமினி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) , தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது, தீயின் பாதிப்பு 40 விழுக்காடாக மதிப்பிடப்பட்டிருந்ததுடன், தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். இன்று காலை மணி 9.30 நிலவரப்படி, 90 விழுக்காடு தீ அனைக்கப்பட்டு விட்டதாக அகமட் முக்லிஸ் கூறினார்.
18 தீயணைப்பு வீரர்களுடன் செமினி , காஜாங் மற்றும் பாங்கி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் வாகனங்களும் உதவிக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.



