புத்ராஜெயா, ஏப்ரல்-29, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்கக் குத்தகைகளை வழங்கிய சந்தேகத்தின் பேரில், வட மாநிலமொன்றைச் சேர்ந்த முக்கியத் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC விசாரித்து வருகிறது.
மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் கீழ் 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், சாலைப் பழுதுப் பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களை அமர்த்தியன் பேரிலும் அவர் விசாரிக்கப்படுகிறார்.
அந்நிறுவனங்கள் அவரின் மகனுடன் தொடர்புடையவை என MACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் வாயிலாக அத்தலைவரின் மகன் அக்குத்தகைத் திட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்தாண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் அக்குற்றங்கள் புரியப்பட்டுள்ளன.
அந்நிறுனங்கள், ஜோடிக்கப்பட்ட தகவல்களைச் சமர்ப்பித்ததோடு, மொத்த குத்தகை மதிப்பில் 5% தொகையைக் கமிஷனாகப் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த மூத்த தலைவரின் மகனது கட்டுப்பாட்டில் அத்தகையை 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கனிம நீர் புட்டி, பரிசுக் கூடைகள் மற்றும் நினைவுப்பரிசுகளைத் தருவிக்கும் குத்தகைகளை அவைப் பெற்று வந்திருக்கின்றன.
அவ்விவகாரம் விசாரணையில் இருப்பதை MACC தலைவர் Tan Sri Azam Baki-யும் உறுதிப்படுத்தியுள்ளார்.