கோலா லாங்காட், மே 30 – சிலாங்கூர், தெலுக் பங்லிமா காராங், தஞ்சோங் ரூ கடற்கரையிலிருந்து, இரகசிய பாதை வழியாக, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 11 கள்ளக்குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பூலாவ் கேரி பொது தற்காப்பு படை வீரர்களும், ரேலா தன்னார்வ படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் வாயிலாக, நள்ளிரவு மணி 12.30 வாக்கில், அவர்கள் அனைவரும் கைதுச் செய்யப்பட்டதை, கோலா லாங்காட் இடைக்கால போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் சூபியான் அமின் உறுதிப்படுத்தினார்.
கைதுச் செய்யப்பட்ட அனைவரும் ஏழு வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட, இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாட்டவர்கள் என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில், ஐந்து சிறார்களும், நான்கு பெண்களும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும், கடல்மார்க்கமான இரகசிய பாதை வாயிலாக, நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளதாக, சூபியான் சொன்னார்.
அதனால், குடிநுழைவுத் துறை சட்டத்தின் கீழ், விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆறு பிரம்படிகளுடன் அவ்விரு தண்டனைகளுமே விதிக்கப்படலாம்.